புதுக்கோட்டை புராதனங்கள் அபாய நிலையில்!!!
Posted by fourthpress on October 13, 2010
புதுக்கோட்டை மாவட்டமே, தொன்மையானது என்றால் அது மிகையாகாது. ஏனெனில், கற்கால மனிதர்கள் வாழும் குகைகள், புதை பொருள் தாளிகள், cane circle எனப்படும் கல் வளைவுகள், நடுகற்கள் ஆரம்பித்து, ஜைன குகைகள், புடைப்பு சிற்பங்கள், மூலிகை ஓவியங்கள், முதல் தமிழ் மூல எழுத்துக்களாம் பிராம்மி எழுத்துக்கள், முதல் காலச் சோழர்களின் கோயில் ஆகியவை நிரம்பிய, சித்தன்னவாசல், குடுமியான் மலை, நார்த்தாமலை, கடம்பர்மலை, ஆளுருட்டிமலை ஆகியவை நிரம்பிய பகுதி புதுக்கோட்டை. அந்தப் பெயர் இனி நிலைக்குமா என்பது சந்தேகமே. கடந்த சில மாதங்களாக மிக அதிகமாக கல் குவாரி காண்டிராக்டர்களால், அடி முடி காணாமல், தொல்லியல் துறையின் சட்டங்கள், தடுப்பு சட்டங்கள், (ban) ஆகியவை மதிக்கப் படாமல், இந்த காலத்தால் அழியாத புராதனச் சின்னங்கள் பெயர்ந்து விழும் நிலை ஏற்பட்டுள்ளது. எந்நேரமும் அதிரும் குண்டுகளால், குகைகளும், நிற்கும் இடங்களும் மக்கள் நடமாடுகையிலேயே ஆட்டம் கொண்ட வண்ணம் உள்ளது. இப்படியே தொடர்ந்தால், மத்தியத் தொல்லியல் துறையால் காக்கப்படும் இச்சின்னங்களும் குவாரிக் கற்களாக இரையாகும் நாள் வெகுதூரமில்லை. மத்திய தொல்லியல் துறை அதிகாரிகளையும், அங்குள்ள காவலர்களையும் தொடர்பு கொண்ட போது, யாரிடம் முறையிட்டாலும், அரசியல் பலமிக்க கல் குவாரிக் காரர்களை தடுக்க முடியவில்லை என்று வருத்தமே தெரிவிக்கின்றனர். இனியும் தாமதியாமல், தமிழ் நாடு அரசு தொல்லியல் சின்னங்கள் உள்ள மலைகள் முழுவதையுமே காப்பதற்கான சட்டம் இயற்றி,(இல்லை இருக்கும் சட்டத்தை தூசி தட்டி எடுத்து) உடனேயே இந்த காலவரையற்ற குண்டுவெடிப்புகளை தடுக்காவிட்டால், தமிழகத்தின் தொன்மைக்குப் பெருமையாக விளங்கும் இச்சின்னங்கள் இனி புகைப்படங்களாக மட்டும் காணும் நிலை உருவாகிவிடும். அரசு உடனடியாக கவனிக்குமா?
படங்கள்: எஸ்.ஜெயக்குமார்.
இப்போது வெளியாகியுள்ள ஜூனியர் விகடன், மதுரை அருகேயுள்ள கீழவளவு மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் இதே போல் கல் குவாரிகள் புராதனச் சின்னங்களை அழித்துவிட்டதை சுட்டிக் காட்டி வெளியிட்டுள்ள செய்தி படம் காண்க, கீழே:
நன்றி; ஜூனியர் விகடன் இதழ் தேதி: 17.10.10
இப்படியே ஒவ்வொரு மலையையும் தகர்த்து, புராதனங்களையும் அழித்து, நவீன ரோடு போட்டு, எங்கே போக? மயானத்துக்கா?
இன்றைய தினமலரில் (14.10.10) வந்த செய்தி
உடனடியாக செய்தி வெளியிட்ட தினமலர் ஆசிரியருக்கு மனமார்ந்த நன்றிகள்.
இன்றைய டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் வந்த செய்தி.
நன்றி டைம்ஸ் ஆஃப் இந்தியா!
அதே பக்கத்திலேயே கீழே புதுக்கோட்டை மற்றும் மதுரையில் தான் அதிகபட்சமாக குடைவரைக்குகைகள் கண்டெடுக்கப்பட்டதாக, மத்திய தொல்லியல் துறை சொல்கிறது. அதே இடங்களில்தான் அதிகபட்சமாக, குவாரி ’கல்’ மனசுக் காரர்கள் கல்லுடைக்கிறார்கள்.
மின்னஞ்சல் அனுப்பினால் அதிக பலன் இல்லை என்று நண்பர்கள் தெரிவித்தனர். எனவே புதுக்கோட்டை ஆட்சியருக்கு தந்தி அனுப்புங்கள்.
Innamburan said
நான் புதுக்கோட்டைக்காரன். சிறு வயதில், சித்தன்னவாசல், குடுமியான் மலை, நார்த்தாமலை, கடம்பர்மலை, ஆளுருட்டிமலை எல்லாம் நமக்கு அத்துபடி. அக்காலம் விழுப்புணர்ச்சியில்லாததால், இங்கெல்லாம் உள்ள பொக்கிஷங்களை பாதுகாக்கவேண்டும் என்று தெரியாவிடினும், புதுக்கோட்டை சமஸ்தானம் இவற்றை கவனமாக, அழியாமல் பார்த்துக்கொண்டார்கள். மக்களுக்கும் நாசகார புத்தி குறைவு. ஆனால், இந்த குவாரி அதிபர்கள் பணபலம், அதிகாரபலம், அரசியல் பலம் படைத்தவர்கள். சொல்லிக்கேட்கும் ரகமில்லை. நாம் ஒன்று செய்யலாம். நூற்றுக்கணக்கன பேர், ஒரே கடிதத்த்தில் கையொப்பமிட்டு, எல்லா இதழ்களின் ‘வாசகர் பகுதியில்’ போடச்சொல்லலாம். அடித்தால் அம்மியும் நகரும்.
இன்னம்பூரான்
fourthpress said
நன்றி இன்னம்பூரான் ஐயா. புதுக்கோட்டை மாவட்ட ஆணையர் (கலெக்டர் இதை தடுக்கலாம். அவரது மின்னஞ்சல் இவை: collrpdk@tn.nic.in மற்றும் collr.tnpdk@nic.in
தஞ்சை கோ.கண்ணன் said
மலைமுழுங்கிகள் ! பற்றியெரிகிறது வயிறு ! சீ..சீ……… இது ஒரு நாடா ? பல லட்சக்கணக்கான ஆண்டுகளாக உருவான உலகின் மிகப் பழைய பாறைகள் தமிழ் நாட்டில் ! இரண்டாயிரம்
ஆண்டுகட்கு மேலான கல்வெட்டுக்கள், பழம்பெரும் வரலாற்றுச் சின்னங்கள் என வரைமுறையற்ற அழிப்பு ! மதுரைக்கருகில் ஒரு தனி மனிதன் இவ்வளவும் செய்கிறான் ! அரசியல்வாதிகள் பின்புலம் ! மூன்று அடிக்கு மேல் பள்ளம் வெட்டக்கூடாது அது மணலாயினும் சரி கருங்கல்லாயினும் சரி . கனிம வளத் துறை சட்டம்! மதுரை மேலுருக்கருகில் ஆயிரக்கணக்கான பல சிற்றூர்கள், நீர்நிலைகள் அழிந்தன ! இன்றும் அழிந்து கொண்டு உள்ளன !
நாளிதழ்களில் நாறடித்தார்கள் ! ஊழல் ! ஊழலோ ஊழலென்று ! தூத்துக்குடித் துறை முகத்தில் ஏற்றுமதி ஆன கருங்கல் அளவுக்கும் வெட்ட அனுமதித்த அளவுக்கும் முன்னூறு மடங்கு அதிகம் கொள்ளை. நாட்டு வருமானம் போச்சே ! அலறல்! தமிழ் நாட்டு வளமே கொள்ளை. வெட்கங்கெட்ட அரசியலுக்கு இவனாயிருப்பினும் அவனாயிருப்பினும் தமிழ் நாடா முக்கியம் ?
முசிறிக்கு அருகே நெய்வேலி சுரங்கம் போலே காவேரியில் பள்ளம் ! காவேரி ஆற்று நீர் முசிறி தாண்டாது! மணலும் கொள்ளை !
தமிழ் நாட்டை அழிப்பானாம் ! தமிழைக் காப்பானாம் ! வெட்கம் ! வெட்கம் !
fourthpress said
எத்தனைக் காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே! மக்கள் நடு வீதியில் நின்றூ சின்னங்களைக் காக்க முற்பட வேண்டும். ஆசிரியர்கள், பேராசிரியர்கள், நம் குழந்தைகளுக்கு, மாணவர்களுக்கு நம் ஊரைச்சுர்றியுள்ள புராதனச்சின்னங்களைக் காண்பித்து அவற்றின் மதிப்பை உணரச் செய்ய வேண்டும்.புதுக்கோட்டை மாணவர்களே பொங்கி எழுங்கள். குவாரி லாரிகளை நிறுத்துங்கள்
தஞ்சை கோ.கண்ணன் said
மலைகளும் கொள்ளை ! மணலும் கொள்ளை ! மலைகளை அழித்து மழையைக்குறைத்து மணலை அழித்து நிலத்தடி நீரும் ஒழித்து என்ன ஒரு சேவை ! நாடு இவர்கள் கையில் ! அவர்கள் வந்தால் இன்னும் மோசம் ! பொங்கி எழ நேரமில்லை ! யாருக்கும் வெட்கமில்லை ! எந்திரா …. எந்திரா.ரா ரா ….! அவனுக்கு பாலூற்றுகிறான் ! தமிழன் பாலாபிஷேகம் பண்ணுறான் ! தமிழன் ! தமிழா எல்லாரும் சேர்ந்து உனக்கு பாலூற்றுகிற்றான் … விழித்துகொள் ! அழிவாய் இல்லையெனில் !
முனைவர். கி. காளைராசன் said
ஏதாவது ஒரு நாள் குறியுங்கள், அன்று முடிந்தவர்கள் எல்லாம் ஒன்று கூடி அழிவைத் தடுப்போம், பழமையைக் காப்போம்,
அன்பன்
கி. காளைராசன்
fourthpress said
நாள் குறிப்பது யாருக்கு? சின்னங்களை அழிப்பவர்களை அழிக்கவா? 😉
என்னாளும் நன்னாளே! சிதிலமடையச் செய்யும் இடத்திலேயே பொது மக்கள் அமர்ந்து தர்ணா செய்யவேண்டும்.
இறையரசன் said
அன்பார்ந்தீர்!
வணக்கம்.
தரங்கம்பாடி மாசிலாமணி ஈசர் கோயில் கடல் அலைகளால் படிபடியே அழிவதைத் தடுக்குமாறு
10 ஆண்டுகளுக்கு மேலாகக் கூறிவந்தேன்; அரசுச் செயலர்களிடமும் நேரில் கூறினேன்.கவனிக்கவில்லை. இடிந்தேபோய்விட்டது. தஞ்சை மாரியம்மன் கோயிலில் புதுப்பித்தல் என்ற பெயரில் நாயக்கர், மராட்டியர் ஓவியங்களின் மேலேவேறு ஓவியங்களை வரைந்து விட்டார்கள்.
வர்லாற்றுச்சின்னங்களைப் பாதுகாக்கும் உணர்வு தமிழனுக்கு இல்லை. சங்க காலத்திற்க்கு முற்பட்ட கீழ்வாலை ஓவியங்கள், தமிழகத்தின் முதல் கற்கோயில் ஆகிய மண்டகப்பட்டு, முதல் கட்டுமானக் கோயில் ஆகிய கூரம் சிவன் கோயில் ஆகியனவும் இப்படித்தான் பாதுகாக்கப்பெறாமல் உள்ளன. உங்களைப் போன்ற வரலாற்றார்வம் உள்ளவர்கள் ஒருங்கிணைந்து குரல்கொடுக்கவேண்டும்.
அன்பிலே,
முனைவர் பா.இறையரசன்
fourthpress said
தரங்கம்பாடி மாசிலாமணி ஈசர் கோயில் சிற்பங்கள், சிலைகள் கடலுக்குள் பாறாங்கற்களை கொட்டி முழுகவைத்து சமாதி கட்டிய புண்ணியம் இந்து அற (?) நிலையத்துறையையே சாரும். கீழவளைவு குகை ஓவியங்களைக் காண செல்ல வேண்டுமானால், மிகவும் கஷ்டப் படவேண்டும். வழிகாட்டிப் பலகைகூடக் கிடையாது. என் எண்ணம் என்ன என்ரால், இந்து அறநிலையத் துறையை மூடிவிட்டு, எல்ல கோயில்களையும் மத்தியத் தொல்லியல் துறையிடம் ஒப்படைத்துவிட வேண்டும். விளையாட்டு அமைச்சகம் போல், தொல்லியலும் ஒரு சவலைப் பிள்ளைத் துறை! REACH FOUNDATION போன்ற தன்னார்வக் குழுக்களுடன் சேர்ந்து போராடுங்கள்.
madhuram venkatesh said
We can write to the collector and stop the people who are responsible for the ruin and then write to the concerned authority to protect it.We cannot take the law in our hands. we should compel the collector to take action immediately.
fourthpress said
Thanks Mrs. Madhuram Venkatesh. Unfortunately many public do not indulge in such practice of saving heritage…